விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு கிராமத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி, அதே பகுதியில் இருக்கும் சர்ச், மெக்கானிக் கடை, வீடு ஆகிய இடங்களில் கடந்த 15 தினங்களாய் மர்ம நபர்கள் தொடர்ந்து கொள்ளை அடித்துச் வந்தனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதனால் மரக்காணம் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கூனிமேடு கிராமத்தைச் சேர்ந்த பூசாரி மாரிமுத்து[26], புதுச்சேரி அரியூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜசேகர்[22] மற்றும் கூனிமேடு அரசு மேல் நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உள்பட 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொரோனாவால் கூலி வேலையை இழந்த ராஜசேகர் மரக்காணத்தில் உள்ள பூசாரி நண்பனான மாரிமுத்துவிடம் பிழைக்க வழி கேட்டுள்ளார்.
அப்போது அவர் கூனிமேடு பகுதியில் பலரும் வெளிநாட்டில் இருந்து பொருட்களை வாங்கி வந்து விற்கிறார்கள். அதை திருடலாம் என ஐடியா கொடுத்துள்ளார்.
இதனை செயல்படுத்த கூனிமேடு வந்து திட்டம் போட்ட போது மாரிமுத்துவின் நண்பரான மற்றொரு பூசாரியின் மகன் (11ம் வகுப்பு படிக்கிறான்) தனது பள்ளியில் கம்ப்யூட்டர் உட்பட பல பொருட்கள் இருப்பதாக கூறியுள்ளார்.
இதனால் 3 பேரும் டாடா ஏஸ் வாகனத்துடன் சென்று நள்ளிரவில் பள்ளியில் திருடியுள்ளனர். யாரும் கண்டுபிடிக்காததால் தேவாலயம், வீடுகள் என கடந்த 15 நாட்களாய் நள்ளிரவில் பள்ளி மாணவன் மூலம் நோட்டமிட்டு திருடி உள்ளனர்.
சமையல் சிலிண்டர், செண்ட் பாட்டில், டேபிள் பேன், கை பேன், செல்போன் ஸ்பீக்கர், ஹர் கூலர் என சின்ன பொருள் முதல் பெரிய பொருட்கள் வரை கண்ணில் பட்ட அனைத்தையும் அள்ளினார்கள்.
இவற்றை கோயில் பூசாரியின் ஐடியா படி கோயில் குடோனில் வைத்து விட்டு கொரோனாவிற்கு பிறகு விற்கலாம் என திட்டமிட்டிருந்தனர் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த திருடிய பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், டாட்டா ஏஸ் வாகனம் உள்பட 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்து மரக்காணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த பொருட்களை விழுப்புரம் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு குற்றவாளிகளை பிடித்த தனிப்படை போலீசாரை பாராட்டினார்.